தென் சென்னை செய்திகள்
120 அடியாக குறைக்க கோரும் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: முல்லைப்பெரியாற்றில் 120 அடியாக குறைக்கக்கோரும் கேரள அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏகே ஆனந்த் தலைமையிலான குழு அளிக்கும் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. இதனை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா கூறி வந்தது.
மேலும் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் எனவும் கூறியது. இது தொடர்பாக அம்மாநில சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. கேரளா முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் தலைமையில் அனைத்து கட்சியினரும் டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தினர் இதனையடுத்து கேரளாவில் போராட்டம் வெடித்தது. அங்குள்ள தமிழர்கள், ஐய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதில் தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு கோரியிருந்தது. இந்த மனு டி.கே.ஜெயின் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏ.எஸ் ஆனந்த் தலைமையிலான நீதிபதிகள் குழு அளிக்கும் அறிக்கை படி தான் முடிவு செய்யப்படும் என கூறினர். இரு மாநிலங்களில் நடக்கும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என இரு மாநிலங்களுக்கும் அறிவுரை வழங்கினர். பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
கேரளா அரசு தேவையற்ற வதந்தியை பரப்பி அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், அம்மாநிலத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
